November 30, 2009

பள்ளியறை



பள்ளியறை 
*****************


உன்னை தீராத தாகத்துடன்
தின்று தீர்த்து முடித்து
சோம்பல் முறித்து
படுக்கையில் புரண்டு
ஆடைகள் அணியும்முன்பே
சட்டென எதற்காக

ஒரு துளி கண்ணீர் எட்டிப்பார்க்கிறது ?




 
                                                

November 29, 2009

பண பற்றாக்குறை-காரணம் என்ன?

பண பற்றாக்குறை  !!!



 

நான்

1000  ரூபாய் சம்பளம் வாங்கும்போது  பற்றாக்குறை  தான்
5000  ரூபாய் சம்பளம் வாங்கும்போது  பற்றாக்குறை  தான்;
10000 ரூபாய் சம்பளம் வாங்கும்போது  பற்றாக்குறை  தான்;
இப்போது 100000 (1லட்சம்) ரூபாய் சம்பளம் வாங்குகிறேன்.
ஆனாலும் அதே பற்றாக்குறை. என்ன நடக்குது இங்கே???

அப்போது தான் எனக்கு ஒன்று தெளிவாக புரிந்தது ,

பற்றாக்குறை சம்பளத்தில் இல்லை.நமது மனதில்தான் திட்டமிடல் இல்லாமை என்கிற பற்றாக்குறை இருக்கிறது என்று.


 
போதுமென்ற  மனம் இல்லாத  பற்றாக்குறை:நான் சென்னை வரும் முன்பு, தூத்துக்குடி பேருந்தில் பயணம் செய்யும் போது, ஒரு சென்னை நண்பரிடம் கேட்டேன்,சென்னையில் விலைவாசி அதிகம் என்று கூறுகிறார்கள், நான் சென்னையில் குடியேற நினைக்கிறேன்..சமாளிக்க முடியுமா என்றுஅவர் சொன்ன பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது.சென்னையில் ரூ1000 வைத்து குடும்பம் நடத்த முடியும்..ரூ100000(1 லட்சம்) வைத்தும் குடும்பம் நடத்த முடியும்.அந்த திட்டமிடல் உன் கையில் தான் இருக்கிறது என்றார். 

அவருடைய வார்த்தைகளை அப்போது கேட்டிருந்தால் இன்று நான் எவ்வளவோ சேமித்திருக்கமுடியும். என்ன செய்வது...சென்னை வந்த பிறகு உற்றார்,நண்பர்கள் எல்லாம் தவறாக நினைப்பார்களோ என்று வாடகை வீட்டையும் அல்லவா அழகு படுத்தினேன்.வீட்டுக்கு வரவங்க நம்மை மதிக்க வேண்டும் என்று தேவை இல்லாவிட்டாலும் ஆடம்பர பொருட்களை  வாங்கி குவித்தேன்.பணம் எல்லாம் இப்படி தேவையற்ற விஷயங்களில் முடங்கி போனது.மருத்துவ அவசரம் என்றாலோ, குழந்தைகளின் கல்விக்கான கட்டணம் கட்டவேண்டி வந்தாலோ திணற வேண்டியிருக்கிறது.இதையே நான் வங்கியில் சேமித்து இருந்தால் அவசர தேவைக்கு தடுமாற்றம் இன்றி சமாளித்திருக்க முடியும். 


" நம் வீட்டு வாசலை மட்டும் பார்க்கவேண்டும் ,
பக்கத்து வீட்டு  வாசலை பார்த்து போட்டியிட்டால்,
                     மேலே சொன்ன பற்றாக்குறை  நம் வாழ்வில் வரும்


எளிமையான வாழ்க்கையில் தான் உண்மையான மனமகிழ்ச்சி இருக்கிறது என்பதை தாமதமாக உணர்வது மனிதனின் குறைபாடு.பணத்தை சேமித்த பின்பு வாங்கி மகிழலாம் என்கிற பிடிவாதம்,கடன் வாங்கியாவது இதை வாங்கியே தீருவேன் என்கிற பிடிவாதத்தை விட சால சிறந்தது.


மனிதன் விசித்திரமானவன்.எப்போதுமே 'அடுத்தவன் நம்மை எப்படி நினைப்பானோ' என்றுதான் யோசிப்பானே தவிர தன் சுய திருப்தியை பற்றியோ அல்லது தன் வருமானத்திற்கு உகந்த வாழ்க்கை பற்றியோ 
சிந்திக்க மாட்டான்.

அங்குதான் பண தடுமாற்றத்தின் முதல் சிக்கல் தொடங்குகிறது. இதை நாம் முதலிலேயே சரி செய்துவிட்டால் நம் வாழ்க்கையில் என்றுமே கொண்டாட்டம்தான் !!!



கருத்து :               மரியா அண்ணா.
எழுத்து வடிவம் : அடியேன் நானே.

(இந்த பதிவை படித்து கல் எறிந்தால் மரியா அண்ணனுக்கு, பூங்கொத்து கிடைத்தால் எனக்கு!!!)

November 28, 2009

விகடனுக்கு நன்றிகள் !!!

 
என்னுடைய ஐம்பதாவது பதிவை (பெருமையுடன் வழங்கும் ஐம்பதாவது இடுகை :) சிறந்த பதிவாக யூத்புல் விகடன் அங்கீகரித்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.











 சிறந்த பதிவாக தேர்ந்தெடுத்த யூத்புல் விகடனுக்கும்,அந்த பதிவிற்கு பின்னூட்டம் இட்டு வாழ்த்தை தெரிவித்த அத்தனை நண்பர்களுக்கும், தமிழிளிஷில் வாக்களித்த நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.








 
 

மூன்று கவிதைகள் !!!


நட்பு
சிநேகிதங்கள்
சிந்திக்கொண்டிருக்கிறது
சிறு சிறு மழைத்துளிகளாய்
நான் முற்றும் துறந்து மணற்பரப்பில்
நெஞ்சுடைந்து கிடைக்கையில்....

காதல்
கண்கள் பார்த்து
காது குளிர வார்த்தைகள்;
கைகள் பிடித்து
கால்நோக நடக்கலாம்;
மனசு முழுக்க
மருதாணி வாசம்;
மழைக்காலம் வரை
நீ என்னில் தீயாய்
இதயம் தீபம் அணையும் வரை
இதே காதலோடு...

வாழ்க்கை
நீ,நான்,நாம்,அவன்,அவள்,அவர்கள்
அனைவரும் முகமூடியில்..
காதல்,காமம்,நட்பு,சிரிப்பு
கண் எட்டும்வரை காற்றாடியில்..
தொலைதூரம்,வெகுநெருக்கம்,பிரிவு,இணைவு
தொலைந்து போகும் மிகவிரைவில்...
பணம்,மனம்,பாசம்,உறவு,துறவு
பறந்து போகும் பத்து வினாடியில்...
ஆனாலும் வாழ்க்கை வாழ்வதற்கே.

November 27, 2009

தமிழன் மாவீரனை போற்றுவோம் !!!



மறைந்த தோழர்கள் புகழ் பாட
மாவீரர் தினம்;
தலைவன் உரைகேட்ட
தமிழ் இனமே தவம் கிடக்கும்;
இன்றோ எம் தலைவன் புகழ் பாட
இந்த தரணியே எழுச்சியாய்;

மக்களின் விடுதலைக்காக
மரணத்தை முத்தமிட்டாய்;
பல்லாண்டுகள் போராடி இன்றோ
புது புரட்சிக்கு வித்திட்டாய்;

மரணம் என்பது உன் உடலுக்கு மட்டுமே
மரணமில்லா உன் கனவுகளும்,லட்சியமும்
வென்று விரைவில் வெற்றி கிட்டுமே;
தாரணி எங்கும் தமிழர் புகழ் எட்டுமே!

இன்னுயிர் ஈந்த தோழர்களே
இனி தமிழர்க்கு விடியல்தான்;
இமைகளை சற்று மூடுங்கள்
இனி ஒரு விதிசெய்வோம் கூறுங்கள்;

November 25, 2009

தூங்காத விழிகள் !!!

தூங்காத விழிகள் !!!

பின்னிரவில் எழுந்து
உறக்கம் கலைந்து
படுக்கையில் புரண்டு
பலமணிநேரம் மறந்து
மனம் யோசித்தது;
எதற்காக பிறந்தோம்?
எதற்காக வளர்ந்தோம்?
எதற்காக காதலித்தோம்?
எதற்காக பிரிந்தோம்?
எதற்காக நட்பானோம்?
எதற்காக பகையானோம்..............

மறுநாள் காலையில்
மிச்சமிருந்தது நேற்றைய
சிகரட் துண்டும், தூங்கா விழிகளின் வலியும் !!!

November 24, 2009

உன் நினைவில் நான் !!!




என்னை காதலிக்கிறேன் என்றாய்
வேண்டாமென மறுத்து விட்டேன்;
இன்றோ நான் உன்னை விரும்புகிறேன்
நீயோ வேறு ஒருவருடன் மணமேடையில் !!! 

விசித்தரமான இந்த வாழ்க்கையில்
வேண்டுதல் நேரத்தில் கிடைப்பதில்லை;
வேண்டாமை வலிய வருகையில்
நூலறுந்த பட்டமாய் அலைபாய்கிறேன் உன் நினைவாய்...

(இந்த கவிதை என் நண்பன் ரமேஷ் ஞானபிரகாசம் என்கிற ரமியின் எண்ணங்களில் உதித்தது..நான் அனுமதியுடன் வெளியிடுகிறேன்)

மாவீரர் தினத்தன்று ஒரு நாள் முழுக்க பதிவர்களின் ஈழ படைப்புக்கள்.

நம் சகோதர செல்வங்கள்-இன்றைய எந்திர உலகிலும் எவ்வித வசதிகளும் இன்றி முகாமில் தனித்து வாழும் நம் அன்பு இன மக்கள்-தமிழ் ஈழ மக்கள் !!!

இவர்களுக்காக போராடிய ஒரு விடுதலை படை இன்று சற்று பின்வாங்கியுள்ள சூழ்நிலையில் 'மாவீரர் தினம்' கொண்டாடப்படுமா அல்லது கொண்டாடாதா என்றெல்லாம் இருக்கிற குழப்பமான இந்த நேரத்தில் தமிழ் இனத்தை சேர்ந்த 

நாம்,தமிழை சுவாசிக்கிற நாம்,தமிழை எழுதிக்கொண்டு இருக்கிற நாம் நம் இன சகோதர்களுக்காக அன்றைய தினத்தில் என்ன செய்ய போகிறோம்?



 

நாம் கையில் துப்பாக்கி ஏந்த வேண்டாம்; அதைவிட கூர்மையான ஆயுதமான நம் பதிவர்களின் எழுத்து இருக்கிறது; 

நாம் அணுகுண்டை போட வேண்டாம்; அதைவிட வலிமை வாய்ந்த நம் பதிவர்களின் ஒற்றுமை இருக்கிறது;


 நாம் எந்த மேடைக்கும் சென்று உரை ஆற்ற வேண்டாம்; நமக்கென இங்கே பல இணையதளங்கள் இருக்கிறது;

இன்னமும் எனக்கு புலிகளின் வரலாறு முழுதாக தெரியாது;ஆனால் தமிழனின் வரலாறு தெரியும்.தமிழனும்,புலிகளும் வெவ்வேறு இல்லை;நம்மூர் அரசியல்வாதிகள் 

(அண்ணன் உண்மைத்தமிழனின் பார்வையில் அரசியல்வியாதிகள்) அங்கே செத்துக்கொண்டே இருக்கும் நம் இனத்திற்காக போராடுகிறார்களா அல்லது நாடகம் ஆடுகிறார்களா என்பது இப்போதைக்கு முக்கியமில்லை.நமக்கு இப்போது அரசியல் பற்றி பேச வேண்டாம்.அதைவிட முக்கியமான வேலை ஒன்று இருக்கிறது;

அது வருகின்ற நவம்பர் 27 ஆம் தேதி நம் இனத்திற்காக போராடிய-உயிர் துறந்த தோழர்களுக்காக நடைபெறும் "மாவீரர் தினம்".அன்று நம் பதிவர்கள் அனைவரும் படைக்கின்ற படைப்புகள் அனைத்தும்(கதை,கவிதை,சிந்தனை,

செய்திகள்,வீடியோ,அனுபவம்,பொது,விமர்சனம்) இப்படி எதுவாக 
இருந்தாலும் அது நம் இலங்கை முகாமில் வாடும் நம் தமிழினத்தை பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது இந்த சிறுவனின் அவா.

அன்று மீண்டும் நம் பதிவர்களின் ஒற்றுமை இந்த உலகிற்கு தெரியட்டும்;நமக்கு அரசியல்வாதிகளை விட சமூக பங்களிப்பு உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவோம்.  மாவீரர் தினம் அன்று நம் இனத்திற்கு நாம் செய்யும் ஒரு சிறு உதவியாய்/நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம் என்பதின் அடையாளமாய் நம்படைப்புகள் இருக்கட்டும்.
   
மாவீரர் தினம் அன்று தமிழினத்தை பற்றி எழுத/பேச நான் அல்லது நாம் விடுதலைபுலிகளாக இருக்கவேண்டும் என்பதில்லை.தமிழனை பற்றி பேச-எழுத-போராட நாம் ஒரு தமிழனாக இருந்தால் மட்டுமே போதும்.நான் தமிழன்.

November 23, 2009

என் மறுபிறப்பின் கதை ..**முற்றும்**

நானும் நடந்ததை சொல்லியபிறகு திரு.ரானா(Assistant consular Officer,Embassy of India,Baghdad,Iraq) கனிவாக என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்பதை தெளிவாக விளக்கிசொன்னார்.


மரியா அண்ணா அவர்கள் வேலை செய்யும் துறை மூலம் ஈராக் நாட்டு பிரஜையான மர்வான்,அலி,அதீர்,ஹுசாம் மற்றும் எங்கள் லீகல் வக்கீல் தாமார் மூலம் பாக்தாத்தில் உள்ள நம் இந்திய தூதரகம் சென்று எனக்கு புது பாஸ்போர்ட் கிடைக்க தேவையான ஆவணங்களை தயார் செய்து கொடுத்துவிட்டு வந்து விட்டார்.

சம்பவம் நடந்த தேதி          :  29-september-2009
ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேதி :  14-October-2009

நேற்று  காலை நேரம் சரியாக பத்து மணிக்கு மரியா தன் துறைக்கு வருமாறு தொலைபேசியில் அழைத்தார்.

உள்ளே நுழைந்தவுடன் ரமேஷ்,மரியா ஓடி வந்து என்னை கட்டிபிடித்து வாழ்த்து சொல்கிறார்கள்.உடன் இருந்த மர்வான்,அலி,அதீர்,ஹுசாம்,தாமார் ஆகியோரும் கைகுலுக்கி தன் சந்தோஷத்தை சொல்கிறார்கள்.பணி காரணமாக பக்கத்துக்கு ஊர் பாஸ்ராவில் இருந்து நண்பர்கள் ராஜ்,சிவா,வினய் தொலைபேசியில் வாழ்த்தை சொல்கிறார்கள்.ஏனெனில் இன்று சரியாக பத்து மணிக்கு மரியா எனது புது பாஸ்போர்ட்டை என்னிடத்தில் ஒப்படைத்தார்.


சரியாக 52 நாட்கள் நான் ஈராக்கில் பாஸ்போர்ட் இல்லாமல் இருந்து இன்று காலை என் புது பாஸ்போர்ட்டை பெற்றேன்.இந்த கடந்த 52 நாட்களும் எனக்கு இரவினில் நிம்மதியான தூக்கம் இல்லை,கண்களை மூடினால் தீயின் இன்னொரு கோரதாண்டவம் தான் தெரிகிறது.எனக்கு சிறிது காலம் ஆகும் இந்த சம்பவத்தை மறக்க.

இந்த சம்பவத்தை மிக சாதாரணமாக ஒரு பத்தியில் சொல்லி முடித்துவிடலாம்.ஆனால் நம்மை சுற்றி எத்தனை நல்ல உள்ளங்கள் இருக்கிறது என்ற உண்மை எனக்கு மட்டுமே தெரிந்து இருக்கும்.அவர்களுக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேன்?பல விதங்களில் எனக்கு உதவிகள் பல புரிந்த இந்த ஈராக் நண்பர்களுக்கு என்ன பெரிதாக செய்து விட போகிறேன்? நம்மை சுற்றியும் நல்ல விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.கவனிப்பதும்,அதை கொண்டாடுவதும் நம் கையில்தான் இருக்கிறது. முடிந்தவரையில் நாமும் மற்றவர்களுக்குதோள் கொடுப்போம்.

இந்த மகிழ்ச்சியான நேரத்தில் எனக்கு பெரும் உதவிகள் புரிந்த இந்த கட்டுரையில் பெயர் குறிப்பிட்டுள்ள அனைவருக்கும்,என் அலுவலக சக தோழர்களுக்கும், பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி திரு.ரானா அவர்களுக்கும், அவருடைய ஊழியர்களுக்கும் என் நெஞ்சம் கனிந்த நன்றியினை தெரிவிப்பதில் பெரும்மகிழ்ச்சி அடைகிறேன்.  

வருகின்ற சனவரி மாதம் முதல் வாரம் சென்னையில் உள்ள என் குடும்பத்தை சந்திக்க போகிறேன் என் புது பாஸ்போர்ட் துணை கொண்டு. புது ஆண்டு நிச்சயம் எனக்கு புது தெம்பையும், புது மலர்ச்சியையும் கொடுக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இந்த கட்டுரையின் நோக்கம்:

வெளிநாட்டில் வாழும் என் அன்பு நண்பர்களே!

1)உங்கள் பாஸ்போர்ட்டை மிக பத்திரமாக வைத்திருங்கள்.

2)உங்கள் பாஸ்போர்ட் நகல்,நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் ஐடி கார்ட்,கல்வி சான்றிதழ்கள்,குடும்ப அட்டை,இந்திய ஓட்டுனர் உரிமம்,வாக்காளர்  அட்டை, விசா இவற்றின் நகல்களை எப்போதும் உங்கள் கையில் வைத்திருங்கள் அல்லது உங்கள் மெயில் ஐடிக்கு ஸ்கான் செய்து வையுங்கள்.

3)அப்படியும் ஏதேனும் பாஸ்போர்ட்டை தொலைக்க நேர்ந்தால் பதட்டபடாமல் உங்கள் நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தை உடனடியாக தொடர்பு கொண்டு உங்கள்
நிலையை விளக்கி தேவையான ஆவணங்களை சமர்ப்பியுங்கள்.

4)பல நாடுகளில் உள்ள நம் தூதரகங்கள் தற்காலிக சான்றிதழ் கூட வழங்கும்.இது நாட்டுக்கு நாடு மாறுபடும்.

5)உங்கள் பாஸ்போர்ட் தொலைந்து போனால் உடனடியாக பக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து ஒரு முதல் தவகல் அறிக்கை(FIR) வாங்கி,தேவையான ஆவணங்களுடன் இந்தியதூதரகத்தில் தர வேண்டும்.

6)  உங்கள் பாஸ்போர்ட் எரிந்து போனால் உடனடியாக பக்கத்தில் உள்ள 'தீ அணைப்பு துறையில்' இருந்து ஒரு அறிக்கையும், காவல் நிலையத்தில் இருந்து ஒரு 'முதல் தவகல் அறிக்கை(FIR)' வாங்கி,தேவையான ஆவணங்களுடன் இந்திய தூதரகத்தில் தர வேண்டும்.

7) இதைவிட செய்ய வேண்டிய மிக முக்கிய வேலை என்னவென்றால் உங்களை தொலைத்தாலும் உங்கள் பாஸ்போர்ட்டை மட்டும் தொலைக்காதீர்கள் :)


********************************கட்டுரை முற்றும்*****************************

November 22, 2009

என் மறுபிறப்பின் கதை ..பாகம் - 3

பாகம் -3


என் பாஸ்போர்ட்டை எங்கே என்று எல்லோரிடமும் கேட்டாயிற்று.

பதிலாக என் பாஸ்போர்ட்டின் எறிந்த பக்கங்கள் மட்டும் என் கையில் யாரோ திணித்தார்கள்.அதை பார்த்த அடுத்த வினாடி உடைந்து அழுதேன்.வெளிநாட்டில் வாழும் நமக்கு உயிருக்கு அடுத்தபடி பாதுகாக்கவேண்டிய விஷயம் இந்த பாஸ்போர்ட்.அது இல்லையென்றால் நாம் எப்படி இந்தியாவிற்கு செல்ல முடியும்?

ரமேஷ்,மரியா மற்றும் வினய் எல்லோரும் என்னை தேற்றினார்கள்..விடு மாப்ள.பாஸ்போர்ட்,எரிந்து போன மத்த பொருட்கள் வேற வாங்கிக்கலாம்.நீ உயிர் பிழைச்சதே பெரிய விஷயம்.கடவுள் தான் உன்னை காப்பாத்தி இருக்கார் என்றெல்லாம் சொன்னாலும் மனம் மட்டும் அதையே நினைத்து வருத்தத்தில் ஆழ்ந்தது.

சிறிது நேரம் கழித்து முகாம் மேலாளர் எனக்கு வேறு ஒரு புதிய அறையை ஒதுக்கி இருப்பதாகவும்,நாளை அடிப்படை தேவைகளுக்கு சோப்பு,டவல்,பிரஷ் வேண்டிய பொருட்களை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். மற்ற அனைவரும் எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்கள்.

எனக்கு மறுபடியும் தனியாக படுக்க விருப்பம் இல்லை, என் நண்பர்களும் அதை விரும்பவில்லை. மூன்று பேரும் தங்கள் அறைகளுக்கு வருமாறு அன்பு கட்டளை இட்டாலும்...என் கண்கள் மட்டும் எரிந்து போன என் அறையை ஒரு முறை பார்த்தது.

சிறிது நேரம் மன குழப்பத்திற்கு பின், வினய் ரூமுக்கு சென்றோம்.எனக்காக மரியா அண்ணா அந்த நேரத்திலும் பிரார்த்தனை செய்தபோது மனசு நெகிழ்ந்தது.


இரவு 2 மணிவரை எனக்கு ஆறுதலாக பேசிவிட்டு ரமேஷ்,மரியா இருவரும் படுக்க சென்றார்கள். என் வேண்டுகோளின்படி வினய்யும் தூங்கிவிட்டான்.எனக்கு கண்கள் மூடினால் நெருப்பு கோரசிரிப்புகாட்டுகிறது. 

விடிந்தபின் எல்லோரும் அலுவலகம் செல்ல தயார் ஆனார்கள், நானும் தயார் ஆனேன்.நண்பர்கள் என்னை ஓய்வு எடுக்க சொல்லி வற்புறுத்தியும் எனக்கு முகாமில் இருக்க பிடிக்காமல் நண்பர்கள் கொடுத்த சட்டை,பேன்ட்,ஷு போட்டுக்கொண்டு அலுவலகம் வந்த சிறிது நேரத்தில்,குவைத்தில் இருந்து என் அன்பு அண்ணன்,எங்கள் கணினிதுறை மேலாளர் அப்துல் ரஷீத்தும்,அண்ணியும் எனக்கு தொலைபேசியில் ஆறுதல் சொன்னார்கள்.
என்னுடன் பணிபுரிபவர்கள் புதிய பொருட்கள் வாங்க தேவையான பணத்தை அவர்களே ஒவ்வொரு துறைவாரியாக சென்று மொத்தமாய் என் கையில் தருகையில் நான் மறுத்தேன்.மிகபெரிய போராட்டத்திற்கு பின் வாங்கியே ஆகவேண்டிய கட்டாயத்தில் வாங்கினேன்.அன்றே ஒரு நண்பர் உடன் வந்து கடைக்கு சென்று புதியதாய் தேவையான பொருட்களை வாங்கவும்உதவி செய்தார். 
















 
அலுவலகம் முடிந்து சாயங்காலம் முகாம் சென்று என் எரிந்து போன அறையையும்,பொருட்களையும் பார்த்தேன்..எரிந்து போனவை அனைத்தும் எனக்கு கனவுகளாய் தோன்றியது.

மறுநாள் காலை மரியா அண்ணா அவர்கள் பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி திரு.ராணாவுக்கு என்னை பேச செய்தார்.

November 21, 2009

என் மறுபிறப்பின் கதை ..



பாகம் - 2

தூங்கிக்கொண்டே இருந்த வேளையில் கண்ணுக்கு நேராக கடும் அனலை உணர்ந்தேன்.

சட்டென முழிப்பு தட்டி படுக்கையில் இருந்து எழுந்து பார்க்கையில் என்னை சுற்றி ஒரே தீயாய் எரிந்து கொண்டிருக்கிறது.ஒரு நிமிடம் இது கனவா இல்ல நிஜமா என்றே புரியவில்லை எனக்கு.அந்த அனலில் உடம்பு தகிக்கிறது.

நிஜம் என்று புரிந்த அடுத்த வினாடி தீ இல்லாத இடம் எது என்று கண்கள் தேடியது உயிரை காப்பாற்றி கொள்ள. கதவு வழி பக்கம் மட்டும் ஒரு ஆள் போகும் அளவு தீ சற்று இல்லாமல் இருப்பது போல் தோன்றவே கொஞ்சமும் தாமதிக்காமல் வெளியே ஓடினேன்.

வெளியில் ஓடி வந்த அடுத்த நிமிடம் 'தீ அணைப்பு தெளிப்பானை(Fire Extingusher)' தேடினேன். அடடா..அது தீயினில் அல்லவா உடன் சேர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது! தண்ணீரும் கைகிட்டும் தூரத்தில் எதுவும் தட்டுபடவில்லை.
கொஞ்சம் தாமதித்தாலும் தீ வேகமாக மற்ற இடங்களுக்கு பரவக்கூடிய அபாயம் இருந்தபடியால் நேராக பாதுகாப்பு அலுவலகம் நோக்கி ஓடினேன்.

பணியில் இருந்த பாதுகாவலருக்கு நான் விளக்க வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை, ஏனெனில் தீ விண்ணை நோக்கி எரிந்து கொண்டு இருப்பதை அவரும் கவனித்து விட்டார்.உடனே ரேடியோவில் (நம்மூர் டிராபிக் போலீஸ் வைத்து இருப்பார்களே)
'அவசர தகவல்' என்று சொல்லிபடியே முகாமில் உள்ள அபாய சங்கை அழுத்தினார்.

அடுத்த சில நிமிடங்களில் முகாமில் உறங்கிக்கொண்டு இருந்த அனைவரும் வெளியே ஓடி வந்தனர். என் அறைக்கு வந்தவர்கள் அனைவரும் தீயின் உக்கிரத்தை பார்த்து பயந்தாலும் சுதாரித்து கொண்டு அணைக்கவேண்டிய முயற்சிகளில் இறங்கினார்கள்.

எல்லோரும் அங்கும் இங்கும் ஓடுகிறார்கள். தண்ணீர் ஊற்றப்பட்டது,தீ அணைப்பு கருவிகள் மூலம் சிலர் முயன்று கொண்டிருக்கிறார்கள்.இருபது நிமிடங்கள் கழித்து தீ அணைப்பு வண்டிகள் வந்தன.அவற்றின் மூலம் தான் தீயை சற்று சமாதனப்படுத்த முடிந்தது.

என் அறை மொத்தமாக எரிந்து முடிகையில் சரியாக மணி 11.30 காட்டியது. இந்த தீயை அணைக்கும் களேபரத்தில் எல்லோரும் என்னை மறந்து போயிருந்தனர்.


செப்டம்பர் மாதம் என்பதால் இரவின் குளிரும்,கண்ணீரின் கதகதப்பும் என்னை ஏதோ ஒரு நிலைக்கு தள்ளியிருந்தது.

பாதுகாப்பு அலுவலகம் நோக்கி கண்,மண் தெரியாமல் வேகமாக ஓடுகையில் கால்தடுக்கி விழுந்ததில் இடது காலின் சுண்டுவிரல் நகம் முழுதுமாய் நசுங்கி இருந்தது,
அடிப்பாதத்தில் சிறிது சதையும் கிழிந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.அந்த வலியாலும்,சட்டை போடமால் இருந்ததினால் குளிராலும்,உயிர் பிழைத்த அதிர்ச்சியாலும் என் உடம்பு நடுங்கி கொண்டிருந்தது.ஒரு ஓரம் நடக்க முடியாமல் உட்கார்ந்திருந்தேன்.

எல்லாம் முடிந்து இருக்கையில், 'பூங்குன்றன் எங்கே?' என்று என் நண்பர்கள் ரமேஷ்,வினய்,மரியா அண்ணா மற்றும் உடன் பணிபுரிவோர் என்னை தேடி அங்கே,இங்கே அலைந்து கொண்டிருந்ததை பார்த்தாலும் என்னால் குரல் எழுப்ப முடியாத அதிர்ச்சி என்னை ஆட்கொண்டிருந்தது.

ரமேஷ் என்னை பார்த்துவிட்டு அருகில் ஓடி வந்தான்.'மச்சான் என்ன ஆச்சு? உனக்கு ஒண்ணுமில்லையே?'.அதற்குள் மரியாவும்,வினய்யும்,மற்றவர்களும் என்னை நோக்கி ஓடிவருகின்றனர்.


'வாட் தி ஹெல் இஸ் கோயிங் இயர்', 'பூங்குன்றன் இஸ் அலைவ்', 'ஆர் யு ஆல்ரைட்', 'வாட் ஆபன்ட்' இப்படி அவரவர் பேசிக்கொண்டும்,என்னை கேள்வி கேட்டுக்கொண்டும் இருக்கிறார்கள்.

ரமேஷ் : மச்சான் எப்படி ஆச்சு? உனக்கு எதுவும் அடிபடலியே?
நான்: இல்லடா.எனக்கு எதுவும் இல்ல.நான் நல்லா தான் இருக்கேன்.
ரமேஷ்/மரயா/வினய் : தீ எப்படி வந்தது?
நான்: தெரியலடா.தூங்கிட்டு இருந்தேன்.என்னவோ சூடா இருக்குன்னு கண்ணை திறந்து பார்த்தா என்னை சுத்தி தீ .
ரமேஷ்: சரி..சரி..விடு.வா.என் ரூமுக்கு வந்து முதல்ல தண்ணி குடி,ரெஸ்ட் எடு.
நான்: எல்லாம் தீயில கருகி போச்சுடா.ஆமா..என்னோட பாஸ்போர்ட் எங்கே?

November 20, 2009

என் மறுபிறப்பின் கதை ..

பாகம் - 1



செப்டம்பர் மாதம் 2009 ஆம் ஆண்டு 29 ஆம் நாள் இரவை என்னால் சாகும்வரை மறக்க முடியாது.

நான் தற்போது இருப்பது ஈராக் தலைநகரம் பாக்தாத்தில்.இங்கு உள்ள ஒரு அமெரிக்க விமான தனியார் நிறுவனத்தில் கடந்த 2008 சனவரி மாதம் முதல் வேலை செய்து வருகிறேன்..கிட்டதட்ட இரண்டு வருடம் ஆகப்போகிறது.

நல்ல நிறுவனம்.நல்ல தலைமையின் கீழ் நிறுவனம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.என்னுடன் பணிபுரியும் நம் தமிழ் நண்பர்கள் மட்டும் பத்து பேர் இருக்கிறார்கள்.அண்ணன்கள் அப்துல் ரஷீத்,மரியா ஆண்டனி,நண்பர்கள் ரமேஷ்,சிவா,ராஜ்,வினய்,ராக்ஸி செல்வன்......

மற்ற உடன் பணிபுரிபவர்கள் எல்லோருமே அமெரிக்கா,இங்கிலாந்து,தென் ஆப்ரிக்கா,பிஜி,பாகிஸ்தான்,ஸ்ரீலங்கா,பிலிப்பைன்ஸ்,ரஷ்யா,சீனா போன்ற நாடுகளில் இருந்து வந்து என்னுடன் வேலை பார்ப்பவர்கள். இதை தவிர நூறு ஈராக் நாட்டினரும் உடன் பணிபுரிகிறார்கள்.


நானும்,இவர்கள் அனைவரும் தங்க ஒரு அருமையான இடம் உண்டு.அதை முகாம்(CAMP) என்போம்.செங்கல்,சுண்ணாம்பு இவற்றால் கட்டப்படாத ஆனால் உறுதியான ஸ்டீல் கொண்டு செய்யப்பட்ட ட்ரைலரில்(TRAILERS) தங்குவோம். ட்ரைலர் என்றால் சாதாரணமாக நினைக்க வேண்டாம்.அதன் உள்ளே எல்லா வசதியும் இருக்கும்.அதாவது நம்ம கேரவன் வேனில் இருப்பது போன்று.இது மட்டும் இன்றி எங்கள் முகாம் உள்ளேயே உணவு விடுதி,பார்,ஜிம் போன்ற வசதிகளும் உண்டு.

அலுவலகத்திலும்,முகாமிலும் நவீன ரக துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு இருக்கும் எந்நேரமும்.உள்ளூர் எதிரிகளிடம் இருந்து எங்களை பாதுகாக்கவே இப்படி பந்தோபஸ்து.

இதில் உங்கள் மறுபிறப்பு எங்கே வந்தது என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

சொல்கிறேன்..மேற்சொன்ன செப்டம்பர் 29,2009 அன்று வழக்கம் போல பணிமுடித்து விட்டு எல்லோரும் முகாமுக்கு சென்றோம்.தினமும் முகாமில் என் நண்பன் ரமேஷ் அறையில் நான்,மரியா அண்ணா,வினய் எல்லோரும் இரவு உணவு சாப்பிடும்வரை பேசிவிட்டு பின்பு தத்தம் அறைகளுக்கு செல்வது வழக்கம்.அன்றும் இரவு பேசி இருந்துவிட்டு என் அறைக்கு வந்து ஸ்கைப்பில்(SKYPE) என் மனைவியுடன் பேசிவிட்டு படுக்கைக்கு செல்லும்போது நேரம் 9.15 மணி.

அடுத்து ஒரு மணி நேரத்தில் நிகழ போகும் பெரும் ஆபத்தை உணராமல் தூங்கிவிட்டேன்.

November 18, 2009

உயிர் பூவே !!!

உயிர் பூவே !!!

நீ வரும்வழியில்
பூக்கள் தூவ மாட்டேன்.
அந்த பூக்களின் மரணத்தில்
உன் உயிர்ப்பூ வருந்துமே !!!



காதல் மோசடி  !!!

காதலை சொன்னேன்
ஏற்று கொண்டாய்;
முத்தம் கேட்டேன்
மறுக்காமல் இதழில் பதித்தாய்;
கட்டிப்பிடி என்றேன்
இறுக அணைத்தாய்;
நான் கேட்ட அனைத்தும் செய்தாய்
ஆனால் என்னை கேட்காமலேயே
வேறு ஒருவனை மணந்து
வாழ்த்து கேட்கிறாயே?
தரவா? மறவா?

November 17, 2009

பெருமையுடன் வழங்கும் ஐம்பதாவது இடுகை :)

பெருமையுடன் வழங்கும் ஐம்பதாவது இடுகை-  நன்றி நன்றி நன்றி !!!


(எத்தனையோ பேர் நூறு, ஐநூறு என்று பதிவுகள் எழுதி அமைதியாக இருக்கும்போது 'நேற்று மழையில் இன்று முளைத்த காளானாய்' ஐம்பதுக்கே பெருமையா என்று நீங்கள் கேட்பது புரியுது சாமி-ஆனால் எனக்கெல்லாம் இந்த ஐம்பதாவது இடுகையே பெரிய சாமாசாரம்ங்க)

நான் அப்படி என்னதான் எழுதி விட்டேன்? இல்லை இன்னும் அப்படி புதிதாய் என்ன எழுத போறேன்னு பார்த்தா எழுதியவரைக்கும் நிச்சயம் ஒன்றுமில்லை. ஆனால் என் எழுத்துக்கள் நிச்சயம் ஒருநாள் என் தமிழ் மக்களை கவரும் என்பதில் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.

நாம் கடுமையாக உழைப்பின் எந்த கனவும் ஒருநாள் நனவாகும்.என் கனவும் நனவாக உழைத்து கொண்டிருக்கிறேன்.

சரளமாய் பெய்யும் மழையில்,மின்சாரம் இல்லாத ஓர் இரவில்...சட்டென எங்கோ தோன்றும் வெளிச்சம் போல என் கவிதைகள் இருக்கவேண்டும் என்பதே என் ஆசை.

என் கவிதைகள் மகாகவிகள் பாரதி/பாரதிதாசன் கவிதைகள் போல சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றெல்லாம் நினைக்கவில்லை.ஆனால் இன்றைய வேகமான எந்திர சூழலில் ஒரு நிமிடம் என் கவிதைகளை படித்து சிறு மகிழ்ச்சி கிடைத்தால் அதுவே எனக்கு சிறப்பு.

தமிழ் ஒரு அழகான மொழி. தமிழில் நான் எழுதுகிறேன் என்பதே எனக்கு கிடைத்த பேரின்பம்.தமிழனாய் பிறந்ததே ஒரு தவம்.என்னால் முடிந்ததை நானும் எழுதுகிறேன் என்ற அளவில் மிக்க பெருமை எனக்கு.

முகம் தெரியாத பல நல்ல உள்ளங்கள் என் ஒவ்வொரு படைப்பிற்கும் தொடர்ந்து கருத்துகள்,ஆலோசனைகள்,அறிவுரைகள் வழங்கி வருவதை நினைக்கையில் உள்ளம் நெகிழ்கிறது.அவர்களுக்கும்,என் உடன் பணிபுரியும் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியினை தெரிவிப்பதில் பெருமை அடைகிறேன்.

நன்றியுடன்,

பூங்குன்றன்.

November 15, 2009


காதல் வழி யாது?

சன்னமாய் கதவு வழி வந்த காதல்
சலிக்கும்வரை விளையாடியது என்னிடம்.
வேண்டாம் என்று ஒதுக்காமல்
வேண்டுமென்றே சேர்ந்தே நானும் விளையாடினேன்;

சித்தாந்தம்,வேதாந்தம்,கடவுள்,மதம்
சிறிதளவும் வேறுபாடு காட்டாமல்
சிரிக்க சிரிக்க மனம்
சிறைப்பட்டு கிடந்தது அதன் காதலில்;

வாழ்க்கை சூழலில் வேகமாய் போகையில்
வர்ண வானவில்போல காதலும்;
ஒருநிமிடம் நின்று ரசித்தபின்பு
ஓராயிரம் கடமைகள் மனக்கண்ணில்...

வானவில் மறைந்தாலும்
வர்ணம் மட்டும் இதயத்தில் வாசமாய்;
காதல் சுகம்தான் என்றாலும்
சுமையாய் சுருங்கிப்போனது கானல்நீராய்;

இப்போது கதவு வழி வந்த காதல்
விடைசொல்லி வேர் அறுத்து
வேதனையில் உருக வைத்தபடி
சாளரம் வழியில் போகிறது வேறு பாதை நோக்கி !!!

November 13, 2009

பித்தனா? காதல் சித்தனா?









வளைகரங்களால் நீ வாசலில் தானே கோலமிடுகிறாய்
ஏன் என் மனதும் வளைந்து வளைந்து வர்ணமாகிறது ?

அலைகடலில் நீ உன் கால்களை தானே நனைக்கிறாய்
அதற்கேன் என் மனது கிடந்து அலைபாய்கிறது ?

தொலைதூர ஊருக்கு நீ விடுமுறையில் தானே செல்கிறாய்
இதயம் ஏன் பொம்மையை தொலைத்த குழந்தையாகிறது ?

சிலைபோல தானே அழகாக இருக்கிறாய்
ஆனால் உன்னை மீண்டும் உதட்டால் செதுக்கிட ஏன் தோன்றுகிறது?

நடமாடும் தேர்போல தானே இருக்கிறாய்
மனமோ நிலை இன்றி உன்னை தேடி தேடி அலைகிறது ?

விடை தேடி அலையும்போது தெரு பித்தன் சொன்னான்.
முட்டாளே இதற்கு பெயர்தான் காதல் என்று.

மிக்க நன்றி பித்தனே.நீயேன் இப்படி ஆனாய் என்றேன்.
"உனக்கு நான் மூத்தவன்.நீயும் என் வழியில் தொடர்கிறாய் என்றான்."

November 12, 2009

காதல் சிறை

காதல் சிறை !!!

நீ என் கண்களை பார்த்து
பேசுகையில்
காலடியில் உலகம் நழுவுகிறது;

நீ என் கைகளை பற்றி
கதை பேசுகையில்
என் மனத்தோட்ட மலர்கள் எல்லாம் பூக்கிறது;

உன் கொலுசு சப்தம்
கேட்கையில்
இதயம் நூறுமுறை படபடக்கிறது;

இப்படியாய் என் காதல்
தினம் தினம்
வளர்பிறையாய் வளர்கிறது - ஆகவே

தேவதை வந்து வரம் கேட்டால்
வேணாம் என்பேன்.
நீயே எனக்கு தேவதையாக இருப்பதால்...

கண்களால் உன்னை சிறையிலிட்டு
என் மனதிற்குள்
முத்த சங்கிலியால் கட்டி,

வேண்டுமென்றே விடுதலை செய்து
லஞ்சமாய்
மொத்தமாய் உன்னை பெறுவேன் !!!

November 11, 2009

சூழ்நிலை புகைப்படம்

சூழ்நிலை புகைப்படம் (Situation Photo என்பதன் தமிழ் ஆக்கம்-சரியா?)

இதை பற்றி எழுத ஒன்றும் இல்லை.
நம்ம சிங்கார சென்னையில் உள்ள ஒரு தெருதான் இது.கங்கை மாதிரி இருக்கா?


ரியல் ஹீரோ 2009


ரியல் ஹீரோ 2009

வறுமையில் வாடும் சமுதாயத்தை சேர்ந்த திறமையான மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை முன்னேற்றமடைய வைக்கும் திட்டத்தின் பெயர் தான் "சூப்பர் -30'. இந்த திட்டத்தை உருவாக்கியவர், கணித வல்லுனர் ஆனந்த் குமார்.


பீகாரை சேர்ந்த இவர், தன் சூப்பர்-30 திட்டத்தின் மூலம் கடந்த ஏழு ஆண்டுகளில், துப்புரவு தொழிலாளி, ரிக்ஷா ஓட்டுபவர், நிலமற்ற தொழிலாளி உட்பட பலரின் பிள்ளைகளை, இந்தியாவின் முதன் மையான கல்வி மையங்களில் படிக்க வைத்து, சிறந்த தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களாக உருவாக்கி வருகிறார்.ஒவ்வொரு ஆண்டும் திறமை வாய்ந்த 30 மாணவர்களை தேர்ந் தெடுத்து பயிற்சி கொடுப்பதாலேயே இந்த திட்டத்திற்கு சூப்பர் -30 என பெயரிடப்பட்டுள்ளது. இவர், இத்திட்டத்தை துவங்கிய போது, 30 மாணவர்களின் தேவை யை பூர்த்தி செய்வது என்பது சிறிது கடினமானதாக இருந்தது. ஆனால், அவரது குடும்பத்தினர் ஆதரவு கரம் நீட்டினர். ஆனந்த் குமார், மற்ற பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பது போன்ற வேலைகளை செய்து பணம் ஈட்டினார். அவரின் தாயார் ஜெயந்தி தேவி, மாணவர்களுக்கான உணவுகளை தயார் செய்து கொடுத்தார்.


"சூப்பர்-30' திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரே இலக்கு கடுமையாக படிக்க வேண் டும் என்பதே . மாணவர்களுக்கு கடும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் பலன் முதலாம் ஆண்டே கிடைத்தது. தன் குழுவில் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆசிரியர்களுடன் இணைந்து, ஆனந்த் கடுமையாக உழைத்தார். கடந்த ஏழு ஆண்டுகளில், இவரிடம் பயிற்சி பெற்ற 182 மாணவர்கள், நாட்டின் பல்வேறு ஐ.ஐ.டி., மையங்களில் இடம் பெற் றுள்ளனர். கடந்த 2003ம் ஆண்டு "சூப்பர்-30' திட்டம் துவங்கப் பட்டது. அப்போது 30 மாணவர்களில், 18 பேர் ஐ.ஐ.டி.,களில் படிக்க தேர்ந்தெடுக்கப்பட்டனர். அடுத் தாண்டு 22 பேரும், 2005ம் ஆண்டு, 26 பேரும், கடந்த 2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில், தலா 28 பேர் தேர்ச்சி பெற்றனர்.


கடந் தாண்டு மற்றும் இந்தாண்டும் "சூப்பர்-30' மூலம் பயற்சி பெற்ற 30 மாணவர்களும், தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, ஆனந்த் குமார் கூறுகையில், "அடுத்தாண்டு முதல், இந்த திட்டத்தில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 60 ஆக அதிகரிக்க உள்ளேன். அப்போது, தான் பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் வாய்ப்பு பெறுவர்' என்றார்.ஆனந்த் குமார் மாணவ பருவத்தில் மிகவும் கஷ்டப்பட்டவர். தபால் துறை ஊழியராக இருந்த அவரது தந்தை இறந்த பின், ஆனந்த் குமாருக்கு, கருணை அடிப் படையில், கிளார்க் வேலை வழங்கப்பட்டது.


ஆனால், ஆனந்த் குமார் அதை ஏற்க மறுத்து, தன் படிப்பை தொடர்ந்தார். அப்போது பல தடைகளை எதிர்கொண்டார்.அவரது தாய் அப்பளங்கள் மற்றும் பிற உணவுப் பொருட் களை தயாரித்து ஆனந்த் பெயரில் விற்றார். ஆனந்த் குமாரும் அந்த பொருட்களை, வீடு வீடாக சென்று விற்று வருவார். அப்போது அவர் அனுபவித்த துன்பங்கள் தான், அவரை போன்ற மற்றவர்களின் துன்பத்தை உணர வைத்தன. அது தான் "ராமானுஜம் கணக்கு பள்ளி' மற்றும் "சூப்பர் -30' ஆகியவை துவங்க வழி வகுத்தன. இவை இரண்டும் பிரபலமடைய துவங்கிய போது, இவற்றை நிறுத்த கோரி, பல்வேறு தரப்பினரின் மிரட் டல்களை சந்திக்க வேண்டிய சூழல் ஆனந்திற்கு ஏற்பட்டது. கடந்த 2004ம் ஆண்டு, ஆனந்த் கொலை தாக்குதலில் இருந்து தப்பி உள்ளார். இவரது பயிற்சி மையத்தையும், சிலர் தாக்கினர். ஆனால், இதற்கெல்லாம் அஞ்சாமல், ஆனந்த் தன் குறிக்கோளை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.

நன்றி: தினமலர்
தேதி: 10-Nov-2009

November 10, 2009

உங்களுக்கு இன்னிக்கு விடுமுறை..ரெஸ்ட் எடுங்க !!!


இப்போதைக்கு ரெஸ்ட் எடுத்துக்க.எழுதி எழுதி ரொம்ப களைச்சு போய்ட்ட.
 

(ஹலோ..நான் என்னை சொன்னேங்க.ஹி ஹி ஹி)

அதனால ஒரு அழகான தமிழ் பாடல் வரிகளும், அதற்கான ஒலி/ஒளி இணைப்பும் இங்கே..


http://www.youtube.com/watch?v=22tZ-4GSzEI&feature=related


அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்

கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
அன்பில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

நீ நீ ஒரு நதி அலை ஆனாய்
நான் நான் அதில் விழும் நிலை ஆனேன்

உந்தன் மடியினில் மிதந்திடுவெனோ
உந்தன் கரை தொட பிளைத்திடுவெனோ

அலையினலே பிறக்கும் நதி கடலினிலே கலக்கும்
மனதிலே இருப்பதெல்லாம் முனதிலே கலக்கும்

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்

கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
அன்பில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவனே
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன்

எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைத்தோம் எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க...

கனவே கனவே கண் உறங்காமல்....

கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனி காலம்
அன்பில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

 ------------------------------------------------------------------

காதல் போர்க்களம்

காதல் போர்க்களம் ...


இரவு பூக்களாய் உன்
கனவுகள்
சுகந்த மலராக மலர்கிறது;

நிலவின் ஒளியாய் உன்
நினைவுகள்
சூர்ய வெளிச்சமாய் மிளிர்கிறது;

அம்பென பாயும் உன்
பார்வையோ
பூவிதழாய் இனிக்கிறது;

வாழ்வியல் இலக்கணமின்றி நம்
உடல்கள்
காமனின் போர்க்களத்தில் குதிக்கிறது;

எல்லாம் முடிந்து எழுகையில்
ஏனோ இதயம் 
பெருங்குரலெடுத்து அழுகிறது  !!!

November 9, 2009

இறுதி கவிதை!!!


சமர்ப்பணம் 

சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த
உன் நினைவுகளை மொத்தமாய்
காகிதமாய் செய்து கப்பல் இட முயல்கிறேன்;

வண்ண வண்ண பூக்கள் போல்
பூத்திருந்த நம் ஞாபகங்கள்
காய்ந்த சிறகுகளாய் உதிர்வதை உணர்கிறேன்;

காதலிக்கும் காலங்களில் நீ பேசிய
வார்த்தைகள் ஒவ்வொன்றும்
தேன் ஆறாய்;
நீ மறந்து சென்ற பின் யாவும் எனக்கு
கானல் நீராய்;

சேகரித்த உன் சிரிப்புகளை
செலவு செய்ய மனமில்லை;
உன்னை காதலித்த பாவத்திற்காக
இறுதி கவிதையை சமர்ப்பிக்கிறேன்;

பதிவுலக விழாக்கால சலுகைகள் ! பரிசுகள் !!!!



முந்துங்கள் !!!   பதிவுலக விழாக்கால 
சலுகைகள் !  பரிசுகள் !!!!

1) என் ஒவ்வொரு பதிவுக்கும் பின்னூட்டம் இடும் அனைவருக்கும் வருகிற ஏப்ரல் மாதம் முப்பத்து ஒன்றாம் தேதி,வருடம் 2010 அன்று அழகிய கைகடிகாரம் பரிசு அளிக்கப்படும்.

2) அதே நாள் குலுக்கல் முறையில் தேர்ந்தடுக்கப்படும் 3 அதிர்ஷ்டசாலிகளுக்கு மடிக்கணினி பரிசு தரப்படும்.

3) என் ப்ளாக்கில் அதிக பின்னூட்டங்கள் இடும் முதல் இரண்டு பேர்க
ள் விஷேச பரிசாக துபாய் சரவண பவனில் ஒரு நாள் முழுக்க உணவு இலவசமாக
சாப்பிடலாம்.ஒட்டக பாலில் போட்ட டீயும் இலவசம்.


( விதிமுறைகள் :துபாய் பதிவர்கள் இந்த போட்டியில் பங்கேற்கக்கூடாது.போட்டியில் வெல்லும் அந்த இரண்டு பேர்களும்  இந்தியாவில் இருந்து துபாய்க்கு சொந்த செலவில் வர வேண்டும் )


4) அதிக பின்னூட்டங்கள் இடும்(என் ப்ளாக்கிற்கு மட்டும்) சிங்கப்பூர்,துபாய் பதிவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து வெற்றி பெரும் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு புத்தம் புதிய டாட்டா நானோ கார் பரிசளிக்கப்படும். 


(விதிமுறை: முன்பணமாக மூன்று லட்சம் மட்டுமே செலுத்த வேண்டும். முன்பணம் திருப்பிதர மாட்டாது)
 

பதிவர்களே....முந்துங்கள்.அதிக பின்னூட்டங்கள் இடுங்கள்.பரிசுகளை தட்டி செல்லுங்கள் !!!

November 8, 2009

பேசும் நிலா


பெய்யன பெய்யும் மழைக்கு
நீ ரசிகை என்கிறாய்;
உன் அழகின் ரசிகன் நான் சிரிக்கிறேன்!

மாலை நேர சூரியன் அழகு
மிக பிடிக்கும் என்கிறாய்;
எனக்கோ நீ ஒரு பேசும் நிலா !

இசை கேட்டபடி பூங்காவில் நடப்பது
இனிமையான தருணம் என்கிறாய்;
எனக்கு நீதானே காதல் மெல்லிசை !!!

சட்டென தோன்றும் வானவில்
அதை சித்திரம் வரைந்து தா என்கிறாய்;
என் பார்வையில் நீ உயிர் ஓவியமாய் !!!

November 7, 2009

மழைசாரலில் மல்லிப்பூ !!!



என்னை மயக்கிய அழகிய பிசாசே
உன்னை மனச்சிறையில் தள்ளவா
இல்லை அடக்கி அல்லவா?

எங்கயோ பிறந்தாய்; என்னுள் நுழைந்தாய்;
எங்கேயோ இருக்கிறாய்;உயிரில் மிதக்கிறாய்;
மழையாக வருகிறாய்; சாரலாக போகிறாய்;
மெதுவாக கிசுகிசுத்து மின்னலாக மறைகிறாய்;
பூவாக மணக்கிறாய்; புயலாக பாய்கிறாய்;

தென்றலாக வந்து தீமூட்டி போகிறாய்;
தேடி தேடி அலைகிறேன்
முகவரிதான் கிடைக்கவில்லை
முகத்தையும் காட்டவில்லை.

மல்லிப்பூ வாசனையில்
மனதையே கிறங்கடித்தாய்;
வாட்டியது போதுமடி
வந்தென்னை சேர்ந்துவிடு !!!

காதல் பரிசு !!!


என் காதல் மனைவிக்கு சிறு பரிசாய் இந்த கவிதையை சமர்பிக்கிறேன்............

என் காதல் மனைவி 
என்னை கேட்டாள்    
முதன்முதலாய் 
என் மீது எப்போது
காதல் கொண்டீர்கள்?

கேள்வி கேட்பது எளிது
பதில் சொல்வது கடினம் என்றேன் நான்.

சாதுர்யமாக பேசுவதாக நினைப்போ?
எனக்கு இப்போதே பதில் வேண்டும் என்றாள்;

கண்கள்மூடி பின்னோக்கி சென்றேன்.
காதலை சொன்ன முதல் நாள் எது?
                      ------------------
நீ பிறந்தபோதே உன்மீது காதல் கொண்டேனா?
அத்தைமகள் என்பதால் அதீத அன்பு காதலானதோ

உன் சிரிப்பினில் என் இதயம் சிதறியதோ?
சிறு சிறு சிணுங்களில் மனம் தொலைந்ததோ?

மழை பெய்யும் நேரங்களில் நீ நீரை வாரி என்மேல்
அடித்த கணங்களில் காதல் பூத்ததோ?

நீ பருவம் அடைந்ததும் அதுவரை
பதுங்கியிருந்த என் காதல்
பாயும் புலியென சீற்றம் கண்டதோ?

தாவணி அணிந்து, மருதாணி வரைந்து
கொலுசு காலுடன் ஓடிவந்து
"நான் எப்படி இருக்கேன் மாமா?"
என் தோள்தட்டி கண்சிமிட்டி கேட்டபோது
என் விழியும்,இதயமும் ஒருசேர உன்னில் தஞ்சமானதோ?
                         -----------------
கண்கள் திறந்து பார்த்தேன்
பதிலுக்காக காத்துக்கொண்டிருந்தாள் என் மனைவி...

மென்மையாக அவள் காதில் சொன்னேன்
உன் மீது நானோ, என் மீது நீயோ
காதல் கொள்ளவில்லை;

காதல்தான் நம்மை காதல் கொள்ள வைத்தது.
உன்னிடம் காதலை சொல்லும்
ஒவ்வொரு நாளும் முதல்நாள் தான்-அதனால்
நீ என்னை கேட்பதைவிட அந்த
காதலையே கேளேன் என்றேன்;

கண்கள் பனிக்க என்னை கட்டிப்பிடித்துகொண்டாள்
என் காதல் மனைவி!!!

நாங்களும் பத்துக்கு பத்து போடுவோம்ல்ல.....



1) காதலில் காத்திருத்தல் சுகம் தான். 'கண்டிப்பாக வருகிறேன்' என்று சொன்ன என்  காதலிக்காக இரண்டு நாட்களாய் ரிஜிஸ்டர் ஆபிஸில் காத்திருப்பது சுகமா? சோகமா?

2) "இன்டர்வியூக்கு போவதால் உன் பைக் வேணும் மச்சினு" சொல்லிட்டு போன நண்பன், ஒரு வாரம் ஆகியும் வராதலால் டென்ஷனாகி போன் பண்ணி கேட்கும் போது "நம்ம பிரண்ட்ஷிப் எவ்ளோ டீப்டா" என்று சொல்றதை கேட்பது சுகமா? சோகமா?

3) படிப்பில் குறைவான மதிப்பெண்கள் எடுத்துவிட்டு விளையாட்டில் 'ஸ்கூல் பர்ஸ்ட்' கோப்பை வாங்கி வரும் என் மகனை பார்த்து எனக்கு வரும் பீலிங்க்ஸ் சுகமா? சோகமா?

4) ஒரே பஸ்சில் தினமும் வரும் அழகான பெண் ஒருத்தி என்னை பார்த்து புன்னகைத்த பிறகு,இன்னொருவனை பார்த்து 'ஹலோ' சொல்லும்போது என் மனது சுகமா? சோகமா?

5) இன்று மழை பெய்யும்,நாளை மழை பெய்யும் என பல நாட்களாய் எதிர்பார்த்து குடை கொண்டுவந்து ஒரு நாள் மட்டும் மறந்து விடுகையில்,அன்று மட்டும் கொட்டோகொட்டென்று மழை கொட்டும் நாள் சுகமா? சோகமா?

6) வேகமாக பைக்கில் போகையில் அழகான பெண் லிப்ட் கேட்டு,நானும் நிறுத்தி,சேர வேண்டிய இடம் வருவதற்குள்,அவளே நம்மை பலமுறை 'இடித்து' பின்பு அவள் இறங்கி போகையில்,ஜொள் விட்டு நான் 'பை பை' சொல்லி,சிறிது தூரம் வந்ததும் ஞாபகம் வந்து பர்ஸ்ஸை தேடுகையில்,அது காணாமல் போயிருந்தால் நான் அப்போது சுகமா?சோகமா?

7) ஆங்கிலம் எழுத,படிக்க வராத என் நண்பன் திடீரென ஒருநாள் வந்து "மச்சி, காலேஜ் படிக்கிற என் கேர்ள் பிரண்டுக்காக இங்கிலிஷ்ல நானே கவிதை எழுதி இருக்கேண்டா...ப்ளீஸ் படிச்சி தப்பு இருந்தா சொல்லேன்" னு கேட்கும்போது என் கண்களில் இருந்து வரும் கண்ணீருக்கு பெயர் சுகமா? சோகமா?

8)  பல மாதங்களாக பட்ஜெட் போட்டு சேமித்து வைத்த பணத்தில் லேட்டஸ்ட்டாக வந்த டச் ஸ்க்ரீன் மொபைலை வாங்கி வீட்டிற்கு வந்ததும்,"ஹாய் நல்லா இருக்கே மாமா,எனக்குதானே வாங்கி வந்தீங்க,ஸோ ஸ்வீட்னு"சொல்லி பிடிங்கிட்டு போற மச்சினியை பார்த்து வரும் அழுகை சுகமா? சோகமா?

9) திருட்டு தம் அடித்துகொண்டுஇருக்கும் போது "மாடியில் என்னடா பண்றன்னு" அப்பா குரலை கேட்டு பயந்து தம்மை கீழே போட்டுவிட்டு பார்த்தால் சிரித்து கொண்டே வந்த தங்கை என்னை பார்த்து "என் மிமிக்ரி எப்படின்னா" என்று கேட்டால்,சுகமா? சோகமா?

10) பதிவு எழுத ஆரம்பித்த புதிதிலேயே ஒரு நாள் இரவு "சிறந்த தமிழ்மண பதிவாளர்" விருது உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று தகவல் வந்து, எல்லா பிரபல ஆண்/பெண் பதிவாளர்களும் எனக்கு போன் செய்து வாழ்த்தியபின்,கனவு கலைந்து எழுந்து பார்ப்பது சுகமா? சோகமா?

November 6, 2009

"எங்கள் அண்ணா " அப்துல் ரஷீத்.


அப்துல் ரஷீத்!!!

அப்துல் ரஷீத், இவர் எங்கள் கணினித்துறை மேலாளர்.

வெளிநாட்டு அமெரிக்க நிறுவனத்தில்(குவைத்) வேலை கிடைத்து சேர்ந்த அன்றுதான் முதல்முறையாக அவரை பார்த்தேன்.

அதற்கு முன் அவரை பார்த்ததில்லை, ஆனால் ஓரிரு முறை இணையத்தில் நேர்முக தேர்விற்காக பேசி இருக்கிறேன்.

முதல் நாள் என்பதால் கொஞ்சம் பயமாகவும்,படபடப்பாகவும் இருந்தது.வெளிநாடு என்பதால் நம்மூரை போலன்றி நிறைய விஷயங்களுக்குக்காக கையெழுத்து போட வேண்டி இருந்தது.

உடன் இருந்து எல்லாவற்றையும் முடித்து கொடுத்தார்.இரண்டு நாட்கள் குவைத்தில் இருந்துவிட்டு மூன்றாம் நாள் நான் பாக்தாத்(ஈராக்) பயமணமாகும் வரை எல்லா உதவிகளையும் செய்தார்.

ஈராக் வந்து இரண்டு ஆண்டுகள் முடிய போகிறது.வேலையில் நான் சில தவறுகள் செய்திருந்தாலும் ஒருமுறை கூட கடும்சொற்களால் ஏசியதில்லை.(எஸ்கேப்)

என்னை மட்டும் இல்லை-என்னுடன் இந்த நிறுவன கணினி துறையில் இருக்கும் சக நண்பர்கள் எல்லோரையுமே அவர் எப்போதும் அரவணைத்தே வந்து கொண்டு இருக்கிறார்.

சிறந்த பண்பாளர்.அவரிடம் இலக்கியம்,தமிழ்,கவிதை,எழுத்தாளர்கள், சமுதாயம், சித்தாந்தம்,அரசியல்,கடவுள்,கணினி இப்படி எந்த விஷயத்தை பற்றியும் எவ்வளவு நேரம் நேரம் வேண்டுமானாலும் பேசலாம்.

அதற்காக எங்கள் மேலாளர் வயதானவர் என்று நினைக்க வேண்டாம்.ஜஸ்ட் 33 தான் ஆகிறது.(எங்கள் மேலாளரை சினிமாவில் நடிக்ககூட கூப்பிட்டார்கள்,ஆனால் அஜித்,விஜய் பாவம் என்பதால் அந்த பக்கம் போகவில்லை)

மிக அழகாக பாடுவார்.அவர் பாடுவதை ஓரு நாள் முழுக்க கேட்டுகொண்டே இருக்கலாம்.பாடும்போது சிறு பிசிறோ அல்லது தாளம் தப்பியோ பாடாமல் மிகசரியாக பாடுவார்.

நிறைய கவிதைகள்,கதைகள்,கட்டுரைகள் எழுதியிருந்தாலும் வேலைப்பளு காரணமாக வெளியிடாமல் வைத்திருக்கிறார்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை குவைத்தில் இருந்து ஈராக் வருவார்.ஒரு வாரம் தங்கி இருந்து மேற்பார்வையிடுவார்.அந்த ஒருவாரம் நாங்கள் இருக்கும் பாக்த்தாத் ஏர்போர்ட்டே களைகட்டும்.ஒரு மேலாளர் மாதிரி இல்லாமல் நண்பன் மாதிரி,உடன் பிறந்த அண்ணன் மாதிரி எங்களை பார்த்துகொள்வார்.

அந்த எண்ணம் எல்லா மேலாளருக்கும் வந்துவிட்டால் எந்த அலுவலகமும் சிறப்பாக இருக்கும்.

குவைத்தில் இருந்து ஈராக் வரும்போது சும்மா வர மாட்டார்.அண்ணி எங்களுக்காக செய்த புளிசாதம்,பிரியாணி என்று பலவகை சுவையான சாப்பாடுகளை கொண்டு வந்து எங்களை சாப்பிட வைத்து அழகு பார்ப்பார்.ஈராக்கில் ஹோட்டல் இல்லை.நம்மூர் சாப்பாடும் கிடைக்காது.(ஸ்பெஷல் தேங்க்ஸ் டூ அண்ணி)

அவர் கொடுத்த வேலைய முடித்துவிட்டால் அடுத்து நாம் என்ன செய்து கொண்டுருந்தாலும் அதை பற்றி கேட்கமாட்டார்.(செம ஐஸ்)

அவரை நான் வேலையில் சேர்ந்த முதல் நாளிலிருந்து இன்றுவரை 'ஸார்' என்று அழைத்ததில்லை.உரிமையாக 'அண்ணா' என்றுதான் நான் அழைத்து கொண்டு இருக்கிறேன்.

நான் சோர்வுறும் நேரங்களில் அறிவுரை கூறி இயல்பான மனநிலைக்கு கொண்டுவரும் அவரை நான் அண்ணா என்று அழைப்பதில் தவறில்லையே!!

சமீபத்தில் எனக்கு நிகழ்ந்த மிக பெரிய தீ விபத்தில் என் உயிரை தவிர எல்லாவற்றையும் இழந்த நிலையில் அண்ணாவும்,அண்ணியும் குவைத்தில் இருந்து எனக்கு ஆறுதல் சொன்னதோடு மட்டுமின்றி நான் எதிர்பாராத ஒரு உதவியையும் செய்து எனக்கு ஆனந்த கண்ணீரை வரவழைத்துவிட்டார்.(ஸோ கைண்ட் ஆப் யூ &  தேங்க் யூ அண்ணா)

((( இந்த நேரத்தில் இங்கே அந்த விபத்து முடிந்து பிறகு மரியா அண்ணா,ரமேஷ்,வினய்,சிவா,ராஜ் ஆகியோர் எனக்கு கொடுத்த மன தைரியமும்,ஆறுதல்களையும் நினைத்து பார்க்கிறேன்.குறிப்பாக உடன் பிறவா அண்ணன் மரியா அந்தோணி செய்துகொண்டுஇருக்கும் உதவிகள் என் மனதை விட்டு என்றும் அகலாது.)))

இதோ வெளிநாடு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து இன்னும் ஒரு சில மாதங்களில் ஊர் திரும்ப போகிறோம்.எங்கள் 'அண்ணா' வின் சுகமான சகோதர பாசத்தை மனதில் சுமந்து கொண்டு............

இந்த அண்ணன்-தம்பி உறவு, திரும்ப இங்கயே வந்தாலும்(ஈராக்) அல்லது அங்கயே நின்றாலும்(இந்தியா) தொடர வேண்டும் என்பதே எனக்கும், எங்கள் கணினி துறையில் இருக்கும் சக நண்பர்களுக்கும் ஆசை.

காலம்தான் பதில் சொல்லவேண்டும்!!!

என்று மாறும் இந்த நிலை?


என்று மாறும் இந்த நிலை?

கனவாக போனதோ நம்
தனி ஈழம்?
நனவாக ஆனதோ
நரிகளின் ஆட்டம்?

என் தமிழ் இனமே சாகிறது 
பட்டினியால். 
நாம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம்
பேசிக்கொண்டே இருக்கிறோம்;

சண்டை வேண்டாம்,தனிநாடு வேண்டாம்
பணம் வேண்டாம்,பதவிகள் வேண்டாம்;
மேடை பேச்சுக்கள் நம் சகோதரர்களுக்கு
ஒரு வேலை சோறு போடாது;

பாலைவனத்தில் பஞ்சுமேடை
அமைத்தாலும்
பசியாற உணவு வேண்டாமா?
சுடுகாடே என்றாலும்
சுதந்திர காற்றை எம்மக்கள்
சுவாசிக்கவேண்டாமா?

என்று இந்த நிலை மாறும்?
'இருந்திருந்தால் நன்றாக இருக்குமே' என்கிற
இறைவன் 'இருக்கிறேன் ' என்று
காட்சிகொடுத்து எம்மக்களை
காப்பாற்றுவாரா???

November 5, 2009

அப்பா


அப்பா

இந்த ஒற்றை சொல்லில்தான் எத்தனை பெரிய பெருமையும்,அர்த்தமும் அடங்கியிருக்கிறது.

நம்மில் அநேகம் பேருக்கு அப்பா இப்போது உயிருடன் இருக்கிறார் அல்லது சிலருடைய அப்பா இறைவனடி சேர்ந்திருப்பார்.

ஆனால் எல்லோருடைய அப்பாவும் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு வழிகாட்டியாக,ஆசானாக,முன் மாதிரியாக இருந்திருப்பார் அல்லது இப்போதும் இருக்கிறார்.

சிலருடைய அப்பாக்கள் மட்டும் முன்கோபியாக, குடிகாரனாக,வேலை செய்யாமல் சோம்பேறியாக இருக்கலாம்.இருப்பினும் அந்த நல்ல உள்ளங்களுக்குள் தன் மகனை பற்றிய,மகளை பற்றிய கனவுகள் மட்டும் உயர்ந்ததாக இருக்கும்.

ஒருவேளை அப்பா சமுதாயத்தில் உயர்ந்தவராக இருப்பின் தன் வாரிசு தன்னை விட  உயர்ந்தவனாக இருக்க வேண்டுமென ஆசைப்படுவார் அல்லது சமுதாயத்தில் தாழ்ந்தவனாக இருப்பின்,தன்னை போல் தன் வாரிசும் பெரிய குடிகாரனாக, சோம்பேறியாக இருக்க வேண்டுமென நினைக்க மாட்டார்.

"நான் தான் இப்படி உருப்படாம போயிட்டேன்..ஆனா என் பையன்/பொண்ணு நல்லா படிச்சி பெரிய ஆளா வருணும்"ன்னு நினைப்பாங்க.

அதுக்கு பேர்தான் அப்பா பாசம்.

தான் எவ்ளோ கஷ்டபட்டாலும் தன் பிள்ளைகள் நல்லா இருக்கணும்ன்னு நினைக்கிற அப்பாக்கள் தான் நிறைய இருப்பாங்களே தவிர தன் பிள்ளை கெட்டு போகணும்ன்னு நினைக்கிற கெட்ட அப்பாக்களா யாரும் இருக்க மாட்டாங்க.

என் அப்பாவை பற்றி எனக்கு காலேஜ் போகும்வரை நல்ல அபிப்பிராயம் இல்லைன்னு தான் சொல்வேன்.இத்தனைக்கும் என் அப்பாவுக்கு ஒரு கெட்ட பழக்கமும் இருந்ததில்லை.

ஊர்ல எல்லாரும் மதிக்கிற நல்ல ஆசிரியராக இருந்தார்.பள்ளியில் இருந்து ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகள் ஆனாலும் பல மாணவர்கள் இன்றும் வீட்டிற்கு வந்து நலம் விசாரித்து செல்வார்கள்.

இப்படிப்பட்ட நல்ல அப்பாவை எனக்கு ஏன் காலேஜ் போகும்வரை பிடிக்கவில்லை?

பல காரணங்கள் இருந்திருக்கின்றன.

1) பள்ளிக்கு போகும்போது என் தோழன் தினமும் 5 ரூபாய் கொண்டு வந்து எல்லோருக்கும் தின்பண்டம் வாங்கி கொடுப்பான்.அவன்தான் என் பள்ளி கதாநாயகன்.
நானும் என் அப்பாவை காசு கேட்டால் தராமல் அதற்கு சரியான காரணம் கேட்பார்.அதனால் எனக்கு எங்க அப்பாவை பிடிக்காமல் இருந்திருக்கலாம்.

2) பள்ளி விடுமுறையில் எல்லா பசங்களும் உறவினர்கள் வீட்டுக்கு போயிட்டு வந்து கதை கதையாக சொல்வார்கள்.நான்,என் தம்பிகள் மட்டும் வீட்லயே இருப்போம்.எங்காச்சும் வெளிய போகலாம்ன்னு கேட்டா இந்த விடுமுறையில் அடுத்த வகுப்புக்கு தேவையான பாடங்களை படிக்க சொல்லிடுவார். அதனால் எனக்கு எங்க அப்பாவை பிடிக்காமல் இருந்திருக்கலாம்.

3) பிறந்து வளர்ந்தது கிராமம்தான் என்றாலும் ஆங்கில நாளிதழ்களை வாங்கி படிக்கச் சொல்லிடுவார்,அதோடு மற்றுமின்றி ஒரு நோட்புக்கில் எழுதுவும் சொல்வார்.மற்ற பிள்ளைகளோ பஜார் கடைகள்,கோவில்கள்,மடம் இப்படி சுற்றிவிட்டு வருவார்கள்.நான் கேட்டால் இந்த ஆங்கில நாளிதழ் படித்து விட்டு பிறகு சுற்றிவிட்டு வா என்பார்.அதனால் எனக்கு எங்க அப்பாவை பிடிக்காமல் இருந்திருக்கலாம்.

4) பத்தாவது படிக்கும்போது உடன் படிக்கும் மாணவர்கள் சினிமாக்கு செல்ல முடிவு பண்ணி என்னையும் வரச்சொல்லி கேட்பார்கள்.அப்பாவிடம் கேட்டால் அமைதியாக ஜெயகாந்தன்,கல்கி புத்தகங்களை கொடுப்பார்.எதுவும் பேசாமல் அதை படிக்க வேண்டியிருக்கும்.அதனால் எனக்கு எங்க அப்பாவை பிடிக்காமல் இருந்திருக்கலாம்.

5) +2 முடித்தவுடன் கிராமம் என்பதால் பாதி பேர் போலீஸ்,ஆர்மி,கழனி என்று போய்  விட்டார்கள்.நானும்,என் நெருங்கிய நண்பர்களும் பி.காம் படிக்கலாம் என்று முடிவு செய்தோம்.வீட்டில் இதை பற்றி பேசும்போது அப்பா சொன்னார். +2 முடித்து  பி.காம்தான் படிக்கணும்ன்னு இல்லை.தொழில் நுட்பமும் படிக்கலாம்.அதுவும் கணினி துறை இப்போது நன்றாக உள்ளது.அதை பற்றி யோசித்து விட்டு சொல்லென்று சொன்னார்.வேண்டா வெறுப்பாக டிப்ளமோ சேர்ந்தேன்.அதனால் எனக்கு எங்க அப்பாவை பிடிக்காமல் இருந்திருக்கலாம்.

6) காலேஜ் சேர்ந்து ஒரு ஆண்டு ஆனபோது என் கல்லூரியில் படிக்கும்,என் கிராமத்தை சேர்ந்த நண்பனின் வீட்டில் புதிதாக கார் வாங்கினார்கள்.மாதம் இரண்டுமுறை அவன் அப்பா பக்கத்து் டவுனில் இருக்கும் எங்கள் கல்லூரிக்கு காரில் அவனை அழைத்து வருவார்.நானும் அதே ஊர் என்பதால் என்னையும் காரில் கூட்டிவருவார்.அவன் கார் வாங்கிய பெருமையில் இருப்பான்.நானோ வருத்தமுடன் இருப்பேன்.ஒரு நாள் கோபத்தில் அப்பாவை கார் வாங்க சொல்லி சண்டை போட்டேன்.
அப்போதும் கோவப்படாமல் அமைதியாக இருந்து ஒரு வாரம் கழித்து மெஜஸ்டிக் ஸ்கூட்டர் வாங்கி வந்துவிட்டார்.அதுவும் லோன் போட்டு.அதனால் எனக்கு எங்க அப்பாவை பிடிக்காமல் இருந்திருக்கலாம்.

இப்படி பல 'அதனாக்களால்' எங்க அப்பாவை எனக்கு பிடிக்காமல் போனது அப்போது.

காலேஜ் முடித்து சென்னை/பெங்களூர் என்று மாறி மாறி வேலை செய்து பல வருடங்கள் போராடி இன்று வெளிநாட்டில் கை நிறைய சம்பாதிக்கும் நான் விடுமுறையில் ஊருக்கு செல்ல நேர்ந்தது.

நண்பர்களை பார்க்கும் ஆவலில் என் கிராமத்தை சுற்றி வந்தேன்.

பள்ளிக்கு தினமும் 5 ரூபாயுடன் வந்த பள்ளி நண்பன் ஒரு பெட்டிகடை வைத்து,கடையில் வியாபாரம் இல்லாததால் ராணி வார இதழை புரட்டிக்கொண்டு இருந்தான்.

பள்ளி முடித்தும் பாஜார், கோவில், மடம் என்று சுற்றி கொண்டுஇருந்த பள்ளி நண்பர்கள் சிலர் என்று அதே தோழமையுடன் கூட்டாக சேர்ந்து ஒரு நிதி நிறுவனம் நடத்தி கொண்டுஇருக்கிறார்கள் நிதியே இல்லாமல்.(ஆனால் சாயங்காலம் அந்த நிதி நிறுவனத்தில் குடி,சிகரட்,சீட்டு உண்டு.)

சரி..நம்ம கார் வைத்திருந்த நண்பனாவது எதாச்சும் பெரிய வேலையில் இருப்பானா என்று நண்பர்களை விசாரித்தால்."அட போப்பா..அவன் பிஸினஸ் பண்ணறேன்னு அவங்க அப்பா சொத்தை மொத்தம் காலி பண்ணிட்டு எங்கயோ ஓடி போய்ட்டான்" கேட்கும்போதே மனசு ரொம்ப வலித்தது.

இன்னும் சில பேர் எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றி கொண்டுஇருந்தார்கள்.எங்களுடன் படித்த ஒரு சிலர் தான் ஊரைவிட்டு
வெளியில் வந்து முன்னேறி இருந்தார்கள்.

எல்லா நண்பர்களிடமும் மனம் விட்டு பேசிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தேன்.

அப்பா அமைதியாக தூங்கி கொண்டு இருந்தார்.

என் சிறு வயதிலேயே அவர் சின்ன சின்ன விஷயத்தைகூட எவ்வளவு அழகாக சொல்லி கொடுத்திருக்கிறார் என்று நினைத்ததும் உடம்பு சிலிர்த்தது.

அப்பாவை இப்போது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

November 4, 2009

என் உயிர் தோழியே !!!

இணையத்தில் தோழியாகி
இதயத்தில் புகுந்து விட்டாள்;
நல்ல நட்பினால்
நெஞ்சத்தில் நிறைந்து விட்டாள்;


பாசாங்கு இல்லை,
முகமூடி இல்லை;
வார்த்தை ஜாலங்கள் இல்லை;
வெறுப்புகள் இல்லை;
போலி வேஷமும் இல்லை;


நட்பின் இலக்கணமாய்
நாங்கள் இருக்கிறோம்;
உள்ள தூய்மையோடு
உறவாடுகிறோம்;


வர்ண தோரணை கட்டி உன்னை
வரவேற்கிறேன் என் மன கூட்டுக்குள்..
உண்மையின் நிழலாய் வருகிறேன் என்கிறாய் நீ.
வேண்டாமென சொல்வேனா என் உயிர் தோழியே!!!